X

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

எம்.பி.பிஎஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப் பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் இந்த தேர்வை மாணவ – மாணவிகள் எழுதிய நிலையில் இப்போது 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதி வருகிறார்கள். மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வம் எண்ணிக்கையாக சுமார் 26 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. ஆனால், நேற்று இரவு 9.30 மணிக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியானது. நீட் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தங்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்து வைத்திருக்குமாறும், தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் சர்பார்ப்பு சுமுகமாக நடைபெறுவதற்கு இது அவசியம் என்பதாலும், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று, முன்கூட்டியே விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பிரத்யேக உதவி சேவை எண்ணையும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.