X

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு – தமிழக அரசு உத்தரவு

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய பாடத்திட்ட வடிவமைப்பு உயர்நிலைக்குழு மற்றும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைப் பெற்று, பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்ட அறிக்கையை அரசிடம் வழங்கினர். இதன் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் முதல்கட்டமாக 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இக்குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செயல்படுவார். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் இக்குழுவின் உறுப்பினர்-செயலராகச் செயல்படுவார். இக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

தற்போது 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமலில் உள்ளதால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழு 4-ஆம் வகுப்பு முதல் புதிய பாடத்திட்டத்தைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்படியாகப் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.