தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 5) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.