X

4 வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4-வது முறையாக அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 46 காசுகள் அதிகரித்து 107 ரூபாய் 77 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு நுகர்வோரை அதிரவைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் நடக்கும் இந்தத் தொடர் எரிபொருள் விலை உயர்வு வாகன ஓட்டிகளைப் பெரும் தவிப்புக்குள்ளாக்கியுள்ளது மட்டுமின்றி, லாரி வாடகை போன்ற போக்குவரத்துச் செலவுகள் எகிறி, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் முடிந்த உடனேயே தங்களின் இழப்பை ஈடுகட்டுகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்தப் பாரத்தையும் நடுத்தர மக்களின் தலை மீது ஏற்றியிருக்கும் இந்த நடவடிக்கை, நுகர்வோர் மத்தியில் பலத்த அதிருப்தியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.