பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், 20வது கட்ட தவணை ஆகஸ்ட் இரண்டாம் தேதி விடுவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார். மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை, திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் தனது தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்தத் தவணை விநியோகத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.