ஐந்து நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேசியதோடு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய நெசவுக் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இரண்டு அரிய பட்டு சால்வைகளைப் (Silk Stole) பரிசாக வழங்கியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் விளையும், உலகிலேயே மிக வலிமையான இயற்கை இழைகளில் ஒன்றானதும், காலப்போக்கில் பளபளப்பு கூடும் தனித்தன்மை கொண்டதுமான உலகப் புகழ்பெற்ற ‘முகா பட்டு’ (Muga Silk) சால்வை ஒன்றை அவர் மெலோனிக்குப் பரிசளித்தார். அதோடு, மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள சிருய் காஷோங் மல சிகரத்தில் மட்டுமே பூக்கக்கூடிய, டாங்கூல் நாகா பழங்குடி மக்களின் தூய்மை மற்றும் அடையாளத்தின் சின்னமான ‘சிருய் லில்லி’ (Shirui Lily) மலரின் வடிவங்கள் கைவண்ணத்தில் நெய்யப்பட்ட பிரத்யேகப் பட்டு சால்வையையும் அவர் இத்தாலியப் பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலக் கலைகளிலும் ‘லில்லி’ மலர் நேர்த்தி மற்றும் அழகின் அடையாளமாகக் கருதப்படுவதால், இந்த வடகிழக்கு இந்தியப் பாரம்பரியப் பரிசுகள் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரப் பிணைப்பை உலக அரங்கில் மேலும் ஆழப்படுத்தியுள்ளன.