X

பார்ட்டியில் கற்பழிக்க முயற்சி – நிவேதா பெத்துராஜின் மீ டூ அனுபவம்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

அப்போது நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:-

“பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும். அவர் செய்த தவறுக்கு குடும்பத்தினர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்றார்.