சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா டான் சேரா. இவரின் கூட்டாளிகளில் மிக முக்கியமானவர் தொப்பை கணேசன். ஏ பிளஸ் சரித்திரப்பதிவு குற்றவாளியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே ரூ. 25 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகை, ஜனவரி 30-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ரவுடி தொப்கை கணேசனை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் பதுங்கியிருந்தார். அவரை பிடிக்கச் சென்ற போலீஸாரை அவர் தாக்கியுள்ளார். இதனால் போலீஸார் அவரை என்கவுன்டர் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கில் தொப்பை கணேசனின் கூட்டாளி ஹரி என்ற அறிவழகனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொப்பை கணேசனை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.