X

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது அப்பாஸ் தஸ்தகீர் (35) என்பவர் பழையகாயல் சிர்கோனியம் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 17.02.2022 அன்று அதிகாலை ஆத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொட்டல்காடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிராக வந்த வேன் மோதி படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

அவரது இறப்பு குறித்து அவரது மனைவி தமீமா ரோஷன், அவரது பிள்ளைகள் முஹம்மது பைசல், அர்ஷத் அஹமது மற்றும் அவரது தகப்பனார் செய்யது அப்பாஸ் புகாரி தாயார் சித்தி பாத்திமா ஆகியோர்கள் மேற்படி வாகனத்தின் உரிமையாளர் மற்றும் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மீதும் ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கோரி தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.ரவீந்திரன் மூலமாக வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா இறந்து போனவர் குடும்பத்தினருக்கு வேனின் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.1,57,72,816-ம் அதற்கு மனு தேதி முதல் 7.5% வட்டியும் செலவு தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கில் வி. ரவீந்திரன் ஆஜரானார்.