X

அமெரிக்காவில் ரூ.29 லட்சம் கோடி முதலீட செய்ய தென் கொரியா முடிவு

தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரூ.29 லட்சம் கோடி (350 பில்லியன் டாலர்) தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தென் கொரிய நாடாளுமன்றம் தாமதம் செய்து வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால் தென் கொரியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், அந்நாட்டு அரசு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து பேசிய தென் கொரிய தொழில் துறை மந்திரி கிம் ஜங்-குவான், “அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை வரும் 12-ந் தேதி தென் கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம். இந்த தகவல் அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி உயர்வு அபாயம் நீங்கியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் இதில் பிடிவாதமாக இருந்தது. தற்போது தென் கொரியா இதற்குச் சம்மதித்துள்ளதால் இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.