X

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது வழக்கு தொடருவேன் – அர்ஜூன் அறிவிப்பு

சமீப காலமாக ‘மீ டூ’ அமைப்பு மூலம் சினிமா பிரபலங்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளி யிட்டு வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதையடுத்து தற்போது மற்றொரு பிரபல நடிகரான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் கூறியிருப்பதாவது:-

இந்த புகாரை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 150 படங்களில் 60 முதல்70 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்து கையை நீட்டி புகார் கூறியதில்லை.

சுருதி அந்தப் படத்தில் மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் பல படங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நான் முழுக்க முழுக்க தொழில் ரீதியான நடிகன். டைரக்டர் விருப்பப் படிதான் நான் அவருடன் நடித்தேன். அதை மீறி நான் நடிக்கவில்லை. இந்த புகார் பற்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்று கவலையாக உள்ளது. சுருதியை நான் ஒரு போதும் விருந்துக்கு அழைத்தது இல்லை. எனவே என் மீது தவறான புகார் கூறிய சுருதி ஹரிகரன் மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

இந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார்.