X

முதலமைச்சர் ஜோசப் விஜய் பரிந்துரையின் பேரில் புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியானது

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பரிந்துரையின் பேரில் புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குத் தமிழக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து லோக் பவன் மூலமாக அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வசம் பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சிறப்புத் திட்டச் செயலாக்கம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் மகளிர், இளைஞர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் என். ஆனந்த் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும், ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதி மற்றும் ஓய்வூதியத் துறையும், பி. வெங்கடராமனனுக்கு உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆர். நிர்மல்குமார் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சட்டத்துறை (நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, தேர்தல்) அமைச்சராகவும், ராஜ்மோகன் பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும், டாக்டர் டி.கே. பிரபு இயற்கை வளங்கள் (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) அமைச்சராகவும், செல்வி எஸ். கீர்த்தனா தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளதாக அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.