செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தொகுதியில் நமக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டங்களை கூறி ஓட்டு கேட்காமல், நான் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுப்பேன் என கூப்பன் கொடுத்து ஓட்டு கேட்கிறார்.
இங்கே ஒரு நடிகர் இருக்கிறார், கட்சி தொடங்கிய சந்திக்கின்ற முதல் தேர்தலிலே முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். பதவிக்காக மட்டுமே வருகிறார், பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், பதவிக்காக மட்டுமே வந்திருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் நினைத்து இருந்தால் எத்தனையோ கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைந்திருக்க முடியும். ஆனால், நாங்கள் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், அது தான் கொள்கை பிடிப்பு. அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதிக சீட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்து கொள்கை பிடிப்புக்காக நின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி.
கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. அப்படி அதிமுகவுடன் நான் கூட்டணி வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி பிஜேபியுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இன்று அரசியலில் தேர்தல் களமே மாறியிருக்கும். அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி பிஜேபியுடன் கூட்டணி வைத்தற்கு காரணம் உள்ளதா ? ஒன்றுமே இல்லை. ஆகையால், செய்யூர் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளரை அனைவரும் ஆதரித்து பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.