X

தூத்துக்குடி தந்தை, மகன் கொலை வழக்கு – தூக்குத்தண்டனை பெற்ற 9 போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த 2020ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இதில் படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த இரட்டைக்கொலை வழக்கைச் சிபிஐ (CBI) விசாரணை நடத்தியது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வருகிற ஜூன் 25ஆம் தேதி வரை மட்டும்தான் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க முடியும். அதற்குள் முழுமையாக விசாரிக்க இயலாது என்பதால், ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ச்சியாக எங்களால் விசாரிக்க முடியாது” என்று குறிப்பிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு (ஜூன் 17) ஒத்திவைத்தனர்.