X

நாளை தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், வழிபாடு செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலை வாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை தைப்பூச திருவிழாவில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலாவும் நடக்கிறது.