கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
அதன்படி, இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ்’ ஓட்டலில் நடைபெற உள்ளது. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார். பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 5 சொகுசு பஸ்களில் 36 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்னர் நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்களை விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.