X

கோலியை வித்தியாசமாக கருத மாட்டோம் – ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த தொடரில் இந்தியா- ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே ஆடுகளத்தில் உசுப்பேற்றி வாக்குவாதம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கோலியிடம் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபெலிசிஸ் அறிவுரை வழங்கி இருந்தார்.

விராட்கோலி இது தொடர்பாக கூறும்போது, மோதல் போக்கை தான் முதலில் கடைபிடிக்க போவதில்லை என்று கூறி இருந்தார்.

இதற்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டேன் என்று விராட்கோலி தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு இருந்தால் தான் ஆச்சரியம். அவர் சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். நாங்கள் போட்டி மனப்பான்மையோடு ஆடுவோம்.

கோலியை வித்தியாசமாக கருத மாட்டோம். இதற்கு முன்பு நேரிட்டது போல் எதுவுமே நடக்காது. எங்கள் டெஸ்ட் அணி ஒன்று கூடியதும், எப்படி விளையாடுவது, தனி நபர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காகவே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.