வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க இருக்கின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாடு பியாங்யாங் நகரில் கடந்த 7 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் கிம் ஜாங் அன் பேசிய உரை, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது:-
தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களைத் தாக்கினால், எங்களின் அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் தென்கொரியாவை குறிவைக்கும் வகையிலான நவீன ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதே எங்கள் இலக்கு.
அதே நேரத்தில், அமெரிக்காவுடன் நாங்கள் சுமூகமான உறவை மேற்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. வடகொரியாவை வளர்ச்சியடைந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். எங்களை ஒடுக்க நினைக்கும் ‘விரோதப் போக்கு’ கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால். அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயார். அமெரிக்காவுடனான உறவு அவர்களின் கைகளில் தான் உள்ளது. அமைதியாக வாழ்வதா அல்லது மோதிக் கொள்வதா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
இவ்வாறு கிம் ஜாங் அன் ஆவேசமாக பேசினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் கலந்து கொண்டார். இருவரும் கருப்பு நிற ‘லெதர்’ கோட் அணிந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ரசித்தனர். இந்த ராணுவ அணிவகுப்பில் அமெரிக்காவைத் தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. இது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கிம் ஜாங் அன் தயாராக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தண்ணீருக்கு அடியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டிரோன்கள் மற்றும் விண்ணில் உள்ள எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை அடுத்த 5 ஆண்டுகளில் தயாரிக்கப் போவதாக கிம் அறிவித்துள்ளார். தென்கொரியாவை எதிரியாக அறிவித்துவிட்டு, அமெரிக்காவுடன் மட்டும் பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைத்துள்ள கிம் ஜாங் அன்னின் இந்த புதிய பாதை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.