X

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு இடையே அடிதடி!

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு இடையே இன்று (ஜூலை 17) திடீரெனப் பயங்கர அடிதடி சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மாமன்றக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டு, அவையின் மாண்பைக் கெடுத்துவிட்டதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கையை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி எடுத்துள்ளார்.

இன்று காலை கோவை மாநகராட்சிக் கூட்டம் தொடங்கியவுடன், செம்மொழி பூங்காவில் சுமார் 40 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வெளியான பத்திரிகை செய்தி குறித்துப் பேச காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி முயற்சி செய்ததோடு, மேயரை முற்றுகையிடவும் முயன்றார். இதற்கு மேயரும், திமுக கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளுவாகவும் கைகலப்பாகவும் மாறியது.

இந்த ஊழல் புகார் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிடச் சென்றபோது, காங்கிரஸ் பெண் கவுன்சிலரை மூன்றுக்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளிவிட்டதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே மக்கள் பிரதிநிதிகளான பெண் கவுன்சிலர்கள் பொதுவெளியில் மோதிக்கொண்ட இந்தச் சம்பவத்தால், கோவை மாநகராட்சி அலுவலகமே இன்று பெரும் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டது.

Categories: Uncategorized