அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலாரி தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலிலும் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதுபற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

‘வரும் பொதுத் தேர்தலில் டொனால்டு டிரம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், ஜனநாயக கட்சியில் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பதால், வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்’ என்றார் ஹிலாரி.

இதேபோல் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க்கும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools