இங்கிலாந்து சரக்கு கப்பலை விடுவித்த ஈரான்!

தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாதம் 19-ந்தேதி பாரசீக வளைகுடாவில் ஹோர்மு‌‌ஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்தின் ‘‘ஸ்டெனா இம்பெரோ’’ என்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரானின் சரக்கு கப்பலை இங்கிலாந்து விடுவித்தது. இதையடுத்து, இங்கிலாந்தின் சரக்கு கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு சரக்கு கப்பலை விடுவித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சட்டவிதிகளை மீறியதால் 2 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட ‘‘ஸ்டெனா இம்பெரோ’’ கப்பல் 22-ந்தேதி விடுக்கப்பட்டது. அந்த கப்பல் இன்னும் சில தினங்களில் சர்வதேச கடற்பகுதியை வந்தடையும்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools