X

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவி ஏற்றார்

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே (வயது 63), இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே பிரபலமான மூத்த வழக்கறிஞர். நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த எஸ்.ஏ.பாப்டே உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

அயோத்தி நிலம் வழக்கு, தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். இவர் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.