X

கால்நடைத்தீவன ஊழல் வழக்கு – லாலுபிரசாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒரு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். மீதி 3 வழக்குகளில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, லாலு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரை ஜாமீனில் விடுவித்தால், அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்று கூறி, அதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று லாலுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

தான் 24 மாதங்கள் ஜெயிலில் இருந்திருப்பதாக லாலு கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. “14 ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், 24 மாதங்கள் என்பது ஒன்றுமே இல்லை” என்று அவர்கள் கூறினர்.

ஜாமீன் கிடைக்காததால், நாடாளுமன்ற தேர்தலில் லாலு பிரசாரம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.