குற்றவியல் நடைமுறை மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

கிரிமினல் வழக்குகளில் விசாரணை செய்வதற்காக குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் பரிசோதனை மற்றும் உயிரியல் மாதிரிகளைப் பெற காவல்துறைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும்
குற்றவியல் நடைமுறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் அல்லது சிறைத் தலைமைக் காவலர் ஆகியோருக்கு
அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள விதிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, இந்த வரைவு மசோதா கடுமையானது மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தடயவியல் பயிற்சிக்கான சிறப்புப் பல்கலைக் கழகங்களை அமைக்க இந்த மசோதா வழி வகை
செய்யும் என்றார். ,

குற்றவாளிகளை விட போலீஸாரும் புலனாய்வாளர்களும் அதிக திறனுடன் இருப்பதை உறுதிப்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மூன்றாம் நிலை விசாரணை முறையை நம்பவில்லை என்றும், நவீன தொழில்நுட்பம், தரவுத் தளம் மற்றும் தகவல் மூலம் விசாரணை செய்வதையே அரசு நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனிமனித உரிமைகளுடன், சமூகத்தின் உரிமைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும், இரண்டிற்கும் இடையே சமநிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் அச்சப்பட வேண்டாம் என்றும், இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக விவாதத்தின்போது உறுப்பினர் கேள்விக்கு, அமித் ஷா கோபமான முறையில் பதிலளித்தார் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த அமித் ஷா, தமது குரல் கோபத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், தமது குரல் அமைப்பே அப்படித்தான் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் குற்றவியல் நடைமுறை மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools