X

சிரியாவில் இருந்து படைகளை திரும்ப பெற்றுவரும் அமெரிக்கா!

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக டுவிட்டர் தளத்தில் வீடியோ போஸ்ட் செய்திருந்தார்.

அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை.