தேச பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் செயல்படுகிறது – அருண் ஜெட்லி தாக்கு

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் கரங்கள், ஏற்கனவே ஊழலில் தோய்ந்துள்ளது. அதே பாணியில் நேர்மையான மோடி அரசை களங்கப்படுத்த ஊழல் புகார் சுமத்தப் பார்க்கிறது. போபர்ஸ் ஊழலில் சிக்கிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.

போபர்ஸ் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு என்ன செய்தது? அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது. கூட்டுக்குழு, கட்சி சார்பானது. அதனால், அக்குழுவால் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது. இதெல்லாம் தெரிந்துதான், போலியாக ஊழலை உற்பத்தி செய்து, மோடி அரசை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

மேலும், ரபேல் விமான விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தனது மனம் திருப்தி அடைந்து விட்டதாக கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு சொல்வதுதான் இறுதியான வார்த்தை. அதற்கு சவால் விட யாருக்கும் உரிமை கிடையாது.

ரபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரசின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது.

ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறினால், அது எதிரிகளுக்குத்தான் சாதகம் ஆகிவிடும். தேச பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் செயல்படுகிறது.

வெற்று விமானத்தின் விலையை காங்கிரஸ் ஆட்சிக்கால விலையை விட 9 சதவீதம் குறைவாகவும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையை 20 சதவீதம் குறைவாகவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

முந்தைய ராணுவ ஒப்பந்தங்களில் சதிகாரர்களாக இருந்தவர்கள், இப்போது மோடி அரசு மீது விரல் நீட்டுகிறார்கள். அந்த நபருக்கு உண்மை என்றாலே பிடிப்பது இல்லை. கடந்த 6 மாதங்களாக இந்த சபையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யானது. பொய் சொல்வதில் அவர் பெயர் பெற்றவர்.

இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

அருண் ஜெட்லி பேசிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் காகிதத்தில் விமானம் செய்து, அதை அருண் ஜெட்லியை நோக்கி வீசினர்.

அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். “‘நீங்கள் இன்னும் குழந்தைகளா?” என்று அவர் கேட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools