பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும் – சித்தராமையா

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போலீஸ் துறை பற்றி எனக்கும், பரமேஸ்வருக்கும் வாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் அவரிடம் போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம்.

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து என்னுடைய கருத்தை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் தெரிவித்தேன். யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாதவாறு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் துறை பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்தார். இதற்காக வேணுகோபால் டெல்லி சென்றுள்ளார்.

மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களால் 24 மணி நேரத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் உமேஷ் கத்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்று எதுவும் நடக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும். எப்படியாவது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி அமைத்தே எதிர்கொண்டோம். அதே போல் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும்.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கும்போது, தொகுதிகள் ஒதுக்கீடு உள்பட அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools