X

மத்திய அரசின் பட்ஜெட் குழப்பம் நிறைந்தது! – கமல்ஹாசன் கருத்து

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெடை முதல்முறை படிக்கும்போது மத்திய தர மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானதே. பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளையும் ஓட்டைகளையும் மிக எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

தேர்தலின் போது மக்கள் தங்களுக்கு வாக்களிக்க சட்டப்பூர்வமாக பணம் கொடுப்பது போன்று தான் சாதாரண வாக்காளன் இந்த நிதி அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கிறான். வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு இவர்கள் அளித்திருக்கும் சலுகை ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும்.

ஆனால் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் என்றால் அடுத்து வரும் புதிய அரசு இவர்கள் தாக்கல் செய்திருக்கும் குழப்பம் வாய்ந்த இந்த பட்ஜெட்டினை ஏன் தொடர்வார்கள்? அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட்.

மிக முக்கியமாக இந்த மத்திய நிதியறிக்கை தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும் எவ்வித அக்கறையினையும் காட்டவிரும்பவில்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.