X

மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி!

குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் கலாசார விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்கப்படக்கூடிய குஜராத்தின் பாரம்பரிய நடனமான வாள் நடனம் ஆடினர்.

மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை ஏந்திக்கொண்டு நடனம் ஆடினர். இரு கைகளிலும் வாள்களை சுழற்றி நடனமாடுவது ஆபத்தானது என்றபோதிலும் மாணவிகள் நேர்த்தியாக ஆடினர்.

அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை மாணவிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அவரும் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் இறங்கி இரு கைகளிலும் வாளேந்தி சுழற்றி நடனமாடினார். அது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. கைத்தட்டல்களை அள்ளித்தந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. ஸ்மிரிதி இரானியை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.