X

ரஜினியால் தே.மு.தி.க-வுக்கு பிரச்சினையா? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். அதே சமயம் இந்த சட்டத்தால் யாருக்கும் வரக்கூடாது. பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. நிற்கும்.

மற்ற கட்சி தலைவர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக நம் தலைவர் விஜயகாந்த் திகழ்கிறார். அதற்கு ஒரேயொரு சான்று விஜயகாந்த் திரைப்படங்கள் மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏழை-எளிய மக்களுக்கு தானமாகவும் பொருட்களாகவும் வாரி வழங்கி உள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள். விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்வார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா? அல்லது தனித்து போட்டியா? என இப்போது கூற முடியாது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பல கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்களே? என்று கேட்ட கேள்விக்கு “தே.மு.தி.க. இன்று மக்கள் செல்வாக்குடன் உள்ளது. வரும் தேர்தலிலும் அதை நிரூபிப்போம். முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என கூறினார்.

Tags: south news