ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் யெஸ் வங்கி சென்றது

கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கடன் சுமையில் இருந்து வங்கியை மீட்கும்பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 50 ஆயிரத்துக்குமேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கையால் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை முன்கூட்டியே எடுக்க ஏடிஎம் மையங்களில் குவிந்தனர். இதனால் சில ஏடிஎம்-களில் சிறிது நேரத்திலேயே பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டது.

யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டதால், வங்கியின் பங்குகள் இன்று கடுமையாக சரிந்தன. காலை நிலவரப்படி யெஸ் வங்கியின் பங்குகள் சுமார் 10 சதவீதம் வரை சரிந்து, ரூ.33.20 என்ற அளவில் இருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools