தூத்துக்குடி முள்ளக்காடு-கோவளம் பகுதியில் சிப்காட் (SIPCOT) சார்பில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. இதற்காகத் தூத்துக்குடி மற்றும் ஏரல் வட்டங்களுக்குட்பட்ட முள்ளக்காடு 1, முள்ளக்காடு 2, பழையகாயல் ஆகிய வருவாய் கிராமக் கடலோரப் பகுதிகளில் 1,700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து உப்பளம் நடத்தி வருபவர்கள், உப்பள நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, முள்ளக்காடு 1 வருவாய் கிராமத்திற்குட்பட்ட முத்தரையர் காலனி பகுதியில் 41 மீனவர் குடும்பங்கள் குடிசைகள் அமைத்து மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலத்தையும் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மீனவர்களுக்கு விளக்கமளிக்கவும், அவர்களின் கருத்துகளைக் கேட்டறியவும் தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை வகித்து கோட்டாட்சியர் பிரபு பேசுகையில்: “இப்பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைவதால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி, பகுதி விரைவாக வளர்ச்சியடையும். பாதிக்கப்படும் 41 மீனவக் குடும்பங்களுக்கும் சுனாமி காலனி பகுதியில் தலா 3 சென்ட் நிலம் வழங்கி பட்டா வழங்கப்படும்.
மேலும், சிப்காட் நிறுவனம் மூலமாகக் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். வீடுகளைக் காலி செய்து மறு குடியமர்வு செய்வதற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், ஓராண்டிற்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகையும் வழங்கப்படும். எனவே, இத்திட்டம் நிறைவேற மீனவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மீனவர் சங்கப் பிரதிநிதி முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.