X

3வது முறையாக வங்காளதேசத்தின் பிரதமராகும் ஷேக் ஹசீனா!

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. வங்காளதேசத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், இது கேலிக்கூத்தானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்கட்சி மொத்தமாக ஏழு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், பாரபட்சமின்றி மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

முன்னதாக தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் மோதலில் 17 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.