தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த இரண்டு மினி பேருந்துகளைப் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர். மூச்சுப் பரிசோதனைக் கருவி மூலம் ஓட்டுநர்களைச் சோதனை செய்தபோது, அவர்கள் இருவரும் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்த ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நடத்துநர்களைச் சோதனை செய்தபோது அவர்களும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போதையில் வாகனம் இயக்க உடந்தையாக இருந்ததற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ. 10,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, விதிமுறைகளை மீறிய அந்த இரண்டு மினி பேருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குபவர்கள் மது அருந்திவிட்டுப் பணியில் ஈடுபட்டால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.