பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து செப்டம்பர் 4-ம் தேதி அன்று அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஜெகானாபாத் பகுதியில் பாஜகவினர் பேரணி சென்றனர். அப்போது அங்கு வந்த ஆசிரியை பள்ளி செல்ல தாமதமாகிறது எனக்கூறி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்போது பள்ளி செல்வதா எனக்கூறி, பா.ஜ.க. மகளிர் அணியினர் அந்த ஆசிரியை செல்ல விடாமல் தடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கிருந்த போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.