இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் அமையவுள்ளன. அதன்படி வடக்கு மண்டலத்தில் புதுடெல்லி, தெற்கு மண்டலத்தில் சென்னை, கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா மற்றும் மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் இந்தக் கிளைகள் செயல்படவுள்ளன.
புதுடெல்லியில் தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் இயங்கும் வேளையில், சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டலக் கிளையானது உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்பட்டு அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்கும். இப்புதிய அமைப்பினால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழக்கு விசாரணைக்காக டெல்லிக்குச் செல்லும் அலைச்சலும், பெரும் நிதிச் செலவுகளும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.