தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக தரப்பில் இருந்து திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்., பேராசிரியர். ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.இ.எம்.பி, எம்.சி.ஏ,எம்.எல், பி.எச்டி, ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தரப்பில் சுதீஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் தெரியவரும்.