X

ஏற்காட்டில் 49 வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்கியது

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகப் புகழ்பெற்ற 49-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி பிரம்மாண்டமான மலர் அலங்காரங்களுடன் அண்ணா பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் எ.இளம்பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த இந்த ஏழு நாள் திருவிழாவில், தோட்டக்கலைத் துறை சார்பில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமயமான மலர்களைக் கொண்டு விதவிதமான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; குறிப்பாக, ‘வேளாண்மையைப் பாதுகாப்போம், உலகிற்கு உணவளிப்போம்’ என்ற உன்னதக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, சுமார் 90,000 ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை, மாடுகளைப் பூட்டி ஏர் உழும் விவசாயி, ஆடு, மாடு, கன்றுகளின் உருவங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

இது தவிர 45,000 ரோஜாக்களால் ஆன ராட்சத டெடி பேர், பரதநாட்டியக் கலைஞர், தேவதை வடிவங்கள் மற்றும் புளூட்டோ, கூஃபி போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களும், டாலியா, ஜின்னியா உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட அலங்காரத் தொட்டிகளும் பூங்கா முழுவதையும் சொர்க்கபுரியாக மாற்றியுள்ளன.

வரும் மே 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியுடன் சேர்த்துப் பல்வேறு அரசுத் துறைகளின் விழிப்புணர்வு அரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.