2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் பணிகளை பல்வேறு வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் நடை பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.
நாளை நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கும் நாளை முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் 23 தொகுதிகள் காரைக்காலில் 5 தொகுதிகள், மாகி-1, ஏனாம்-1 ஆகிய 30 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கும் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படுகிறது.
நாளை மதியம் 12 மணிக்கு மேல் மாலை 6 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு வழங்கப்படுகிறது.