X

குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! – முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பின், முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தனது அரசின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து உறுதியளித்தார்.

பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது போல, எங்களுடைய அரசு எப்போதும் மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும் என்பதை இந்த அவையில் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.

பேரவையில் தேமுதிக மற்றும் பாமக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், “தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்ட குதிரை பேரம் மற்றும் சிறப்பு அதிகாரி நியமனம் (ஜோதிடர் விவகாரம்) குறித்த கருத்துகளை நான் பரிசீலனை செய்கிறேன். அதேபோல் சௌமியா அன்புமணி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் இந்த அரசு சிந்தித்துச் செயல்படும்,” எனத் தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி செயல்படப் போவதாகக் குறிப்பிட்ட அவர், “நாட்டு நலன், மக்களின் நலன் மற்றும் எங்கள் கொள்கைத் தலைவர்களின் எண்ணங்களை மனதில் வைத்தே இந்த அரசு செயல்படும். முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என அறிவித்தார்.

தன்னுடைய பேச்சின் சிகரமாக, “இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவு கூட விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். தமிழகத்தின் வளர்ச்சிக்குத் துரிதமாக உழைப்போம் என்ற உறுதியுடன் முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.