Tamilசெய்திகள்

இன்றைய பட்டம் முடிவு அல்ல தொடக்கம் – பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். கடந்த 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (எம்.பில்) என மொத்தம் 3,259 பேர் பட்டம் பெற்றனர். இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவியர் உட்பட 104 மாணவியர் சிறப்புத் தகுதி பெற்று பதக்கமும், பட்டயமும் பெற்றனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் மகளிர் கல்லூரி என்றால் ராணி மேரி கல்லூரி தான். 104-வது பட்டமளிப்பு விழா என்றால் இந்த 100 ஆண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். எத்தனை லட்சம் பேருக்கு கல்வியை, அறிவை, ஆற்றலை, வேலைவாய்ப்பை, தன்னம்பிக்கையை, வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். ராணிமேரி கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது பெண் குலத்துக்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். கல்லூரிக்கு முன்னால் கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கம் உள்ளது.பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது.

ராணிமேரி கல்லூரிக்குள் நுழைகிறபோது பழைய நினைவுகள் வந்தது. பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய, பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முனைந்தார். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரும் குடிநீர் சப்ளையை துண்டித்து நிறுத்தி வைத்தார். கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. கல்லூரியையே மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளை வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார். அன்று இரவு 12 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்தது. உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன்? ராணி மேரி கல்லூரியில் பூட்டியிருந்த கேட் மேலே ஏறி குதித்து, நீங்கள் உள்ளே சென்று மாணவிகளை தூண்டி விட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் மீது வழக்குப் போடப்பட்டி ருக்கிறது என்று சொல்லி என்னைக் கைது செய்தார்கள். என்னோடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி யையும் கைது செய்தார்கள்.

கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மாத காலம் நான் சிறையில் இருந்தேன். அதில் எனக்கு ஒரு பெரிய பெருமை. இந்த இடத்திற்கு “கேப்பர்” என்ற பெயர். கடலூரில் என்னை கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்ததும் கேப்பர் சிறை. ஆகவே, என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ நிகழ்ச்சிகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்த கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்கு நான் ஊக்கப்படுத்துகின்ற நேரத்தில், நான் சிறைபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு சம்பவமாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட முக்கியமான இடத்தைப் பிடித்த இடம் தான் இந்த ராணி மேரி கல்லூரி.

இத்தகைய புகழ்பெற்ற இந்த ராணிமேரி கல்லூரியில் 3.2 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்த பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டிடங்களை இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில், உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் ராணிமேரி கல்லூரி.

இன்னார் தான் படிக்கலாம், இன்னார் படிக்கத் தேவையில்லை – உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே பார்க்கலாம் என்ற நிலைமை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பெண்களின் நிலைமை இதை விட மிக மோசமாக இருந்தது. ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்று கேட்கும் காலமாக அது இருந்தது. சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று தந்தை பெரியார் இயக்கம் நடத்தினார். அவரைப் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளால் தான் நீங்கள் இந்த அரங்கில் நுழைய முடிந்தது.

100 ஆண்டு காலப் போராட்டத்தின் விளைவு. அதனால் தான் முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய, உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் மட்டுமல்ல உங்கள் உரிமை. அத்தகைய உரிமை பெற்றவர்களாக உங்களைக் கருதுகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் அமைந்த காலத்தில், பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டியது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். உள்ளாட்சித்தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது தி.மு.க. அரசு. மகளிர் தொழில்முனைவோர் உதவித்திட்டம் கொண்டு வந்தோம். அந்த வரிசையில் தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்தோம். இது ஏதோ கட்டணச் சலுகை அல்ல, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம் இது. இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த கல்லூரியிலேயே தங்கி படிக்க விடுதி கட்டிடம் அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளே விடுதி கட்டிடம் ஒன்று அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்திட்டம் மூலம் பல பெண்கள் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளார்கள்.

ராணி மேரி கல்லூரி மாணவிகள் விளையாட்டுத் துறையிலும் சளைத்தவர்கள் அல்ல. பல மாணவிகள் பல விளையாட்டு பிரிவுகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளார்கள். இசை துறை மாணவிகள் முன்னணியில் உள்ளார்கள் பேராசிரியைகளும் மாணவிகளுக்கு இணையான சாதனைகளை புரிந்துள்ளார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவை ஆற்றி வரும் கல்லூரி பெண் கல்வி முன்னேற்றத்துக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். மாணவிகளும் கல்லூரியை போல உயரிய நோக்கத்துடன் இருக்க வேண்டும். இன்றைய பட்டம் முடிவு அல்ல தொடக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., மேயர் பிரியா மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.