Tamilசெய்திகள்

ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சாரம் கணக்கெடுக்கு திட்டம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் சிவசங்கர்

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 3,700 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் 2200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். 364 திட்டங்களுக்கான பணிகள் நடந்து முடிந்து உள்ளது. மொத்தம் 404 திட்டங்கள் நடைமுறைக்கு எடுக்கப்பட்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிலுவையில் 37 திட்டங்கள் உள்ளது.

நாட்டிற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது வடசென்னையில் 6158 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.

கேள்வி:- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்த அரசு முயற்சி எடுக்குமா?

மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பதில்:-ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே அதற்கான டெண்டர் போய் உள்ளோம். டெண்டர் முடிவுற்று ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.