தமிழகத்தின் 23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே பெய்ய தொடங்கிய மழை விடிய வடிய பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூரிலும் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், வேலூர், கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
