திருச்சியிலிருந்து தம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்காக, கூடுதலாகத் திருச்சி முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயில் (ரயில் எண் : 06192) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு ரயில், இன்று (26.04.2026 – ஞாயிற்றுக்கிழமை) இரவு 10:45 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (27.04.2026) காலை 06:15 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு இன்று காலை 08:00 மணிக்குத் தொடங்கியது. எனவே பயணிகள் விரைவாக முன்பதிவு செய்து, தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த இரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தமிழக அரசின் சார்பில் சென்னைக்குத் தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 184 சிறப்புப் பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 3 ஆயிரத்து 345 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
