Tamilசெய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது – பிரான்ஸ் அதிபர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார். பாரிஸ் நகர விமான நிலையத்தில் அவரை பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பின்னர் சான்டிலி பகுதியில் உள்ள பிரபல அரண்மனையில் மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். அரண்மனையின் தனி அறையில் இருவரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். சுமார் 90 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது. அந்த பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமரிடமும் பேச உள்ளேன். அப்போது காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்வேன். இந்தியாவுக்கு வழங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் டெலிவரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *