Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 2,827 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 2,897 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

டெல்லியில் 970, கேரளாவில் 489, அரியானாவில் 383, மகாராஷ்டிராவில் 221, உத்தரபிரதேசத்தில் 169, கர்நாடகாவில் 167 பேருக்கு தொற்று உறுதியானது.

நாட்டில் இதுவரை 4 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 17 மரணங்கள் மற்றும் நேற்று உத்தரபிரதேசத்தில் 2, மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்டில் தலா ஒருவர் என மேலும் 24 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,181 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,230 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 70 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 19,067 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 427 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 14,85,292 டோஸ்களும், இதுவரை 190 கோடியே 83 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதுவரை 84.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று 4,71,276 மாதிரிகள் அடங்கும்.