Tamilசெய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளை சேர்ந்த 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு 2 ஆண்டு களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்து இயக்கங்களை சேர்ந்த 5 பேருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி, சூளை கூட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் கிளை தலைவர் ஆர்.டி.பிரபு, பாரத் முன்னணியை சேர்ந்த அகில பாரத இந்து அமைப்பை சேர்ந்த விருகை சிவகுமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முகுந்தன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான பாத்திமா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தனிப்பட்ட பாதுகாப்பு பணியை காவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 89 பேரில் பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலும், அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்வ தற்காக வெளியில் செல்லும் இடங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், இதனால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்றார்.