Tamilவிளையாட்டு

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – கேத்தே சுவான், மக்டா லினெட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள். முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3 மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள். கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3

முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள். இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள். அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.