பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன – விங் கமாண்டர் வியோமிகா சிங்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.
பாகிஸ்தான் நேற்றிரவு பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை குறிவைத்து தாக்கியது. பஞ்சாப் மாநிலத்தில் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் அதிக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தொடர் தாக்குதலுக்கு தரப்படும் பதிலடி குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இதுதொடர்பாக விங் கமாண்டர் வியோமியா சிங் கூறியதாவது:
* எல்லையோர மாவட்டங்களில் உள்ள கல்வி, மருத்துவ கட்டமைப்புகளை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
* ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை குறி வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி.
* அதிகாலை 1.40 மணிக்கு இந்தியாவை நோக்கி அதிவேக ஏவுகணையை பாகிஸ்தான் செலுத்தியது.
* பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியது.
* இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன.
* பாகிஸ்தானின் ஆயுத சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தி இந்தியா சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
* பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவில் அப்பாவி மக்கள் சிலர் உயிரிழந்தனர்.
* ஜம்மு, பஞ்சாபில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
* பதற்றம், மோதலை குறைக்கும் வகையில் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.