Tamilசெய்திகள்

மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் நாளை சட்டசபை கூட்டம் முடிவடைகிறது

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந்தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இந்த மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார். அப்போது காவல் துறை தீயணைப்பு துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். சட்டசபைக் கூட்டத் தொடரில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.

அதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார். இதே போல் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மூர்த்தி கோவி. செழியன் ஆகியோரும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான மசோதாவும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாக்கள் அனைத்தும் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அத்துடன் சட்டசபைக் கூட்டம் நாளை முடிவடைகிறது.